போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பில் தற்போதும் புதிது புதிதாக சிறிலங்கா இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
காணி விடயம் தொடர்பில் இன்று இலங்கை நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ள அவர், யுத்த காண்டம் முடிந்தால் அடுத்த காண்டம் ஒரு சுந்திர காண்டமாக அமைய வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
நாட்டில் போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் அதிகளவான காவல்த்துறை மற்றும் இராணுவ முகாம்கள் அமைத்தமைக்கு அரசாங்கம் பல காரணங்களை கூறலாம் என்ற போதிலும், போர் முடிந்த பின்னர் அவற்றை அகற்றியிருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் பின்னர் தற்போது வரையிலும் காணி விடயத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்துள்ளதாகவும், போர் முடிவடைந்த பின்னர் மக்களின் கைகளில் உரிய காணிகள் வந்துசேரவில்லை என்ற கவலையும் ஏக்கமும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேச செயலகத்திற்குப்பட்ட மண்டூர் பிரதேசத்தில் சுமார் 40 குடும்பங்களின் காணிகள் இன்றும் இராணுவத்தின் வசமுள்ள என்பதையும், இதன் காரணமாக குறித்த 40 குடும்பங்களும் வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கிரான் தெற்கு பிரதேச செயலகத்திற்குப்பட்ட முறக்கொட்டான்சேனை பிரதேசத்திலுள்ள மக்கள், 1992ஆம் ஆண்டு குறித்த பகுதியை விட்டு வெளியேறியதை அடுத்து, 52 குடும்பங்களின் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக குறித்த 52 குடும்பங்களும் வாடகை வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் தொடர்ந்தும் தங்கியருக்கும் அவலநிலையில் உள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மேலும் தெரிவித்துள்ளார்.