வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பாக தென்பகுதி தலைவர்கள் தீர்மானிக்க முடியாது எனவும், வடக்கு மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று ஜாதிக கேல உறுமய வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சம்பிக்க ரணவக்க தனது இனவெறி தனத்தை மிகவும் பிரதிபலிப்பத்து வருகிறார் எனவும் சாடியுள்ள சிவாஜிலிங்கம், வடமாகாண முதலமைச்சர் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதா, இல்லையா என்பதை விக்கினேஸ்வரனே தீர்மானிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரை பிரதிநிதியாக நியமிப்பதா, இல்லையா என்பதை வட பகுதி மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக தெற்கில் உள்ள தலைவர்கள் எவரும் தீர்மானிக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு வைக்கின்ற நினைவுச் சின்னங்களே தமிழீழ விடுதலைப் புலிகளது வீர வரலாற்றை பறைசாற்றும் என்பதை தெற்கில் உள்ள தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், எவ்வாறு உங்கள் இராணுவம் கொல்லப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமாக இருந்தால் அதில் எமது போராட்ட வரலாறும் கூறப்பட வேண்டும் என்பதை மறந்து வீடாதீர்கள் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு, நீங்கள் ஆளும் இனம், நாங்கள் ஆளப்படும் இனம் என்ற சிந்தனை இருக்கும் வரை, இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வோ, நல்லிணக்கமோ ஏற்படாது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.