யப்பானிய பிரதமர் ஷின்சோ அபே வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணமாக அமெரிக்காவின் ஹவாய் தீவிற்கு சென்றுள்ளதுடன், அங்குள்ள பசிபிக் பகுதியின் தேசிய நினைவு கல்லறையில் மலர் வளையம் வைத்து ஒரு நிமிடம் மௌன வணக்கமும் செலுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 1941ஆம் ஆண்டில், பேர்ல் துறைமுகத்தில் அமைந்திருந்த அமெரிக்க கடற்படை தளம் மீது யப்பான் நடாத்திய தாக்குதலை குறிக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்திற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இன்று செல்லவுள்ள யப்பான் பிரதமர், அந்த நினைவிடத்திலும் தனது மரியாதையைச் செலுத்தவுள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்தள்ள அந்த துறைமுகத்தில் இருக்கும் நினைவிடத்திற்கு செல்லும் முதல் யப்பானிய பிரதமர் ஷின்சோ அபே என்பது குறிப்பிடத்தக்கது.
1941ஆம் ஆண்டில் இந்த துறைமுகம் மீது யப்பான் மேற்கொண்ட தாக்குதலால் நூற்றுக்கணக்கான அமெரிக்க மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவமே அந்த நாட்டை இரண்டாம் உலகப் போரில் பங்கேற்க தூண்டியது.
குறித்த தாக்குதல் இடம்பெற்று 75ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், யப்பான் பிரதமர் அங்கு சென்று மாண்டவர்களுக்கு மரியாதை செலுத்தவுள்ள போதிலும், யப்பான் நடத்திய தாக்குதலுக்கு ஷின்சோ அபே மன்னிப்பு கோருவார் என்பது எதிர்பார்க்கப்படவில்லை.
எனினும் இதற்கு யப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.