வவுனியா – செட்டிகுளம், முசல்குத்தி காட்டுப்பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முதலியார்குளம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய, அன்ரன் ஜெறின் என்பவரே, துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை 5 மணியளவில், முசல்குத்தி காட்டுப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது, இவர் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த அவர், செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ள செட்டிகுளம் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது, ஆயுதம் ஏந்திய மூன்று பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, மற்றொரு செய்தி கூறுகிறது.