அச்சுவேலி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் ஆபத்து உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் திடீரென தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எழுமாற்றாக நடத்தப்பட்ட சோதனையில் அச்சுவேலி சந்தை வியாபாரிகள் நால்வர் மற்றும் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், யாழ்ப்பாண மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.
அச்சுவேலிப் பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வெளிமாவட்டங்களிலுள்ள சந்தையுடன் தொடர்புடையவர்கள்.
இதையடுத்து, அச்சுவேலி சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.