ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று அமெரிக்க அரச அதிபர் டொனால்ட் ட்றம்ப் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிக்கோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர் ஒன்றை எழுப்புவதற்கு நிதி உதவி வழங்கப்படவில்லை என்ற முரண்பாடு காரணமாக அரசாங்க நடவடிக்கைகளை ட்றம்ப் பகுதியளவில் முடக்கியிருந்தார்.
இதனால் ஏற்பட்ட நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கில் குடிவரவு யோசனைத் திட்டமொன்றை ட்றம்ப் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
எனினும், இந்த பரிந்துரைகளின் மூலம் ஆவணங்கள் எதுவுமின்றி இளவயதுச் சிறுவர்களாக அமெரிக்காவிற்குள் பிரவேசித்தவர்களுக்கு ஏதிலி உரிமம் வழங்கப்படாது என்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.
பதினொரு மில்லியன் குடியேறிகளையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு தாம் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்ற போதிலும் அவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களிடம் ட்றம்ப் கோரியுள்ளார்.
எனினும் ட்றம்ப்பின் இந்தத்திட்டத்தை ஜனநாயகக் கட்சியினர் உடனடியாக மறுத்துள்ளனர்.
இதேவேளை எல்லைச் சுவரை அமைப்பதற்கு இன்னமும் 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என்று ட்றம்ப் கோரி வருகிற போதும், ஜனநாயகக் கட்சியினர் நிதியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.