13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப் நேற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்துப் பேசிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய துணைத் தூதுவர், வினோத் ஜேக்கப், 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடு என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்திய துணைத் தூதுவர் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.