இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில், கடந்த 16ஆம் நாள், இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஐ.நா பணியாளர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தினால், அன்றைய அமர்வுகள் அனைத்தும் நீக்கம் செய்யப்பட்டன.
இதனால் இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
இன்றை விவாதத்தில் இலங்கை தரப்பு குழுவுக்கு ஜெனிவாவுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமை தாங்குகின்றார்.
இந்த விவாதத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள், புலம் பெயர் தமிழ்மக்களின் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள், அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
முதலில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள் உரையாற்றவிருக்கின்றனர்.
இதன்போது இலங்கையானது கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்படவுள்ளது.
அத்துடன் அனைத்துலக நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையிடம் பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பவுள்ளனர்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ள அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள், இலங்கை ஏன் இதுவரை பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுப்பதில் தாமதத்தை வெளிக்காட்டுக்கின்றது என்ற கேள்வியை எழுப்பவுள்ளனர்.
அத்துடன் இலங்கை இந்த விடயத்தில் விரைந்து தனது அர்ப்பணிப்பை காட்டவேண்டுமெனவும் இந்த நாடுகள் வலியுறுத்தவுள்ளன.
அதேபோன்று அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளதுடன், இதன்போது பொறுப்புக்கூறல் பொறிமுறையை அனைத்துலக பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும் என்று வலியுறுத்தவுள்ளன.
அதேவேளை நாளை மறுநாள் இலங்கை தொடர்பான தமது இடைக்கால அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதையடுத்து நடக்கவுள்ள விவாதத்தில் பங்கேற்று பதிலளிப்பதற்காக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம உள்ளிட்டோர் அடங்கிய குழு ஜெனிவா செல்லவுள்ளது.