வடக்கு- கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, உரிமைக்காக குரலெழுப்பும் வகையில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்சிக்கவோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக போராடியிருக்காவிட்டால், இந்நேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கும். அதன்படி தமது உரிமைகளுக்கான போராட்டமாகவே இந்த எழுக தமிழ் போராட்டமும் அமைந்துள்ளது.
வடக்கில் தொடர்ந்தும் காணி ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. தற்போது யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் தொடர்ந்து அதி பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் நில ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுவது வருத்தமளிக்கின்றது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நிலங்கள் பாதுகாப்பு தேவைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது அவ்வாறான தேவை எதுவும் அங்கு காணப்படவில்லை. தற்போது அதிபாதுகாப்பு வலயங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளையும் விடுவிக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.
பாதுகாப்புக்காக மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு போராட்டத்துக்கும் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.