அமைதி வழியில் முன்னெடுக்கப்படவுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்புப் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.
இதற்காக, நீதிமன்றங்களின் மூலம், சிறிலங்கா காவல்துறையினர் தடை உத்தரவுகளைப் பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட பலருக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவு பெற்ற சிறிலங்கா காவல்துறையினர் இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் ஊடாகவும் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
அத்துடன், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களை தூண்டிவிட தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்து திருக்கோவில் காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், திருக்கோவில் பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அதேவேளை, நாளைமறுநாள் வவுனியாவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ, கால்நடையாக பேரணி நடத்தவோ, தடை விதித்து, வவுனியா நீதிமன்றத்தின் மூலம் தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடத்தப்படவுள்ள பேரணி தொடர்பான தகவல்கள் வெளிவருவதை தடுக்கும் வகையில், ஊடவியலாளர்களுக்கும் தடை உத்தரவு பெறப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் புண்ணியமூர்த்தி சசிகரன், நிலாந்தன் உள்ளிட்டவர்களுக்கும் நீதிமன்றக் கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.