பாலி தீவுக்கு அப்பால் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் 6 போர்க்கப்பல்கள், ஒரு உலங்குவானூர்தி மற்றும் 400 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது.
53 பேருடன், இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல், புதன்கிழமை அதிகாலையில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, காணாமல் போயுள்ளது.
இதையடுத்து, இந்தோனேசிய தனது கடற்படை மற்றும் விமானப்படைகளை ஈடுபடுத்தி தீவிர தேடுதலை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரும், மலேசியாவும் மீட்பு கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதுடன் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் மீட்புப்பணிக்கு உதவ முன் வந்துள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல், காணாமல் போனதாக கருதப்படும் இடத்தில் எண்ணெய்ப் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், கப்பலின் எரிபொருள் தாங்கி சேதம் அடைந்திருக்கலாம் அல்லது, மாலுமிகள் விட்டுச் சென்ற சமிக்ஞையாக இருக்கலாம் என்றும் கடற்படையினர் நம்புகின்றனர்.
காணாமல் போயுள்ள நீர்மூழ்கி கப்பலில் 72 மணித்தியாலங்களுக்கு தேவையான ஒக்சிஜன் வசதிகளே உள்ளதாகவும், அதற்குள் அதில் உள்ளவர்களை மீட்க வேண்டும் என்றும், இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.