கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கொழும்பு துறைமுகம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மையமாகும் என கூறினார்.
அத்தோடு கிழக்கு முனையத்திற்கான துறைமுகங்கள் மற்றும் கடற்படை விவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளாமல் கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியா மற்றும் ஜப்பானுடனும் அப்போதைய அரசாங்கம் ஒரு உடன்பாட்டை எட்டியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் இருக்கத்தக்கதாக பிரதமர் மஹிந்த இந்த விடயத்தினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.