சிறிலங்கா அரசாங்கம் மூன்று முறை ஐ.நா தீர்மானங்களுக்கு இணங்கிய போதிலும், அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தமையே தற்போதைய நிலைக்கு காரணம் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறோம்.
மனித உரிமை ஆணையாளரின் பணியகத்துக்கு நாங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், ஆணையாளரின் அறிக்கையில் காணப்படுகின்றன. இது தற்செயலானது.
ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால், இயல்பான விளைவுகள் உருவாகும்.
ஒரு நாடு தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்ற போது ஐ.நா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல், ஏனைய உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தல், பயணத் தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் அண்மைய செவ்விகளை பார்க்கும் போது பத்து வருடங்களின் பின்னரும் அரசாங்கம் மறுக்கும் மனோநிலையிலேயே உள்ளதை புலப்படுத்துகிறது” என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.