பொங்கல் நாளை மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய விடுமுறை நாளாக அறிவிக்குமாறு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்த கோரி்கை விடுத்துள்ள அதேவேளை, இது தொடர்பாக நாளை புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தப்போவதாகவும் திராவிட முன்னேற்றக் கழம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார் என்றும், அதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் பொங்கல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு இதற்கென போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.
இதேவேளை பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் நாள் இல்லை எனக் கூறியுள்ளார்.
தவறுதலாக யாரோ பரப்பியதை நம்பி, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், கடந்த பல ஆண்டுகளாகவே பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இல்லை என்று கூறியுள்ளார்.