தமிழீழ விடுதலைப் புலிகளை அடிபணிய வைப்பதற்காகவே போரை நடாத்தினார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கோ, மேற்குலக நாடுகளுக்கோ, சீனாவிற்கோ அடிபணிவதற்குத் தயாராகவிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் வெளீயீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பூகோளப் போட்டி நடைபெறுகின்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழருக்காகப் பேரம் பேசும் ஒரேயொரு தரப்பாக விடுதலைப் புலிகள் இருந்த நிலையில், முதற்கட்டமாக அந்த அமைப்பை அழிக்க வேண்டும் என்றே விரும்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்பை அழிப்பதன் ஊடாக தமிழ் மக்களை அடிபணிய வைத்து, அந்த அழிவிற்குப் பின்னாலிருக்கக் கூடிய அரசியல் தலைவர்களை எடுபிடிகளாகப் பாவிப்பதற்கானதொரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்காகவே அன்றைய காலகட்டத்தில் காய்கள் நகர்த்தப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்துலக அரசியலை விளங்கிக் கொள்ளாமலிருந்தால், கிடைக்கிற சந்தர்ப்பங்களை நாங்கள் நழுவ விடுவோம் எனவும், அதனால் மக்களுக்கு நாம் மிகப் பெரிய துரோகத்தைச் செய்து விடுவோம் என்ற விடயத்தை ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நினைவுபடுத்தியுள்ளார்.