திருகோணமலை மாவட்டத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் திடீரென அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதை அடுத்தே அவர் இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்துக்கு அவசியமற்ற பயணங்களை மேற்கொள்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, மாவட்ட எல்லைகளில் வீதித் தடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா படைகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில், திருகோணமலை மாவட்டத்தில், சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துமாறும் அவர்களுக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்ற எவராயினும், அவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், கிழக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.