பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும், கவனயீர்ப்புப் பேரணிக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவிலில் நேற்று முன்தினம் தொடங்கிய பேரணி நாளை 6ஆம் திகதி பொலிகண்டியில், நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்தப் பேரணிக்கு கிழக்கில் ஆதரவு அதிகளவில் கிடைத்திருப்பதால், தாமதமாகவே, நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நேற்றிரவு முல்லைத்தீவை வந்தடைந்திருக்க வேண்டிய பேரணி, இன்று நண்பகலே முல்லைத்தீவை அடைந்துள்ளது.
அத்துடன், வவுனியா, மன்னார் மாவட்டங்கள் ஊடாக, பேரணி யாழ்ப்பாணம் நோக்கி நகரும் திட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, வவுனியா, மன்னார், கிளிநொச்சி வழியாகவே பேரணி யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.
வவுனியாவில் பெருமளவில் முஸ்லிம்கள் திரண்டு பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஒரு நாள் தாமதமாக, வரும், 7ஆம் திகதியே பொலிகண்டியில் பேரணி நிறைவடையும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.