மியான்மாரின் யாங்கூனுக்கு வெளியே உள்ள பாகோ நகரில், இன்று அதிகாலை அரச படைகள் மேற்கொண்ட தாக்குதல்களில் 83 போராட்டக் காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நகரில் போராட்டக் காரர்கள் அமைத்திருந்த தடுப்பின் மீது, அதிகாலை 3 மணியளவில் அரச படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், கைக்குண்டுகளையும் வீசியதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது 83 போராட்டக் காரர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை, மியான்மாரில், 19 போராட்டக் காரர்களுக்கு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாங்கூன் நகரில் உள்ள, வடக்கு ஒக்காலப்பா மாவட்டத்தில் கடந்த மார்ச் 27-ம் நாள் மியான்மார் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த கொலைக்கு திட்டமிட்டதாக, 19 போராட்டக்காரர்களுக்கு, இராணுவ ஆட்சியாளர்களின் அறிவுறுத்தலை அடுத்து, நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 1-ம் நாள் தொடக்கம் மியான்மாரில் நடந்துவரும் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.