சிறிலங்கா அரசாங்கத்தின் இனவழிப்பின் பன்னிரண்டாவது ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவுக் கல்லொன்றை ஸ்தாபிப்பதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அக்கல் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது
இதனையடுத்து அப்பகுதியெங்கும் சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்து ஏற்பாட்டாளர்களிடத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் சிறிலங்கா படையினர் குறித்த நினைவுக்கல்லை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு ஏற்பாட்டாளர்களை வலியுறுத்தினார்கள்.
மேலும் காவல்துறையினர், இக்கல்லை கொண்டுவருவதற்கான அனுமதியை பெறவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
எனினும் பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்ட நிலையில் தான் நினைவுக்கல் கொண்டுவரப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
பிரதேச சபையின் அனுமதிக்கு அப்பால் காவல்துறையின் அனுமதி பெறப்பட வேண்டும் என்று காவல்துறை தர்க்கத்தில் ஈடுபட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த புலனாய்வாளர்கள் முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அங்கத்தவர்களின் பெயர் விபரங்களைப் பெற்றதோடு புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை பதிவு செய்தனர்.
அத்துடன் அங்கு மேலதிக படையினர் வரவளைக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் முற்றம் சுற்றிவளைக்கப்பட்டு தற்போது வரையில் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.