பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய நல்லிணக்க கொள்கை வகுப்பு தொடர்பிலும், வரவு செலவு திட்ட ஒதுக்கீடு தொடர்பிலும் தம்மால் முன்வைக்கப்பட்ட அதிருப்திகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, இவற்றை தீர்த்து தருவதாக உறுதியளித்துள்ளார் என்று மனோ கணேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உருவாகும் இன நல்லிணக்கம், சகவாழ்வு அனைத்தும் தமக்கும் ஏற்புடையதாகவும், தமது கருத்துகளையும் உள்வாங்கியதாகவும் உருவாக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் மனக்குறைகளையும், சிங்கள சகோதர மக்களின் மனவுணர்வுகளையும் ஒருசேர அறிந்தவன் என்ற முறையில்தான், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இந்த நிலையில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் சிலர் தன்னிச்சையாக கொள்கை வகுப்பதையும், தனது அமைச்சுக்குரிய பணிகளில் தலையிடுவதையும் அனுமதிக்க கூடாது என்றும், தனது அமைச்சுக்கு போதிய நிதியை ஒதுக்க தயங்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் அமைச்சரை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய நல்லிணக்க கொள்கையை உருவாக்க முயல்வது தமிழ் பேசும் மக்களுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் தவறான சமிக்ஞைகளை தரும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் விபரம் வெளியிட்டுள்ளார்.