இந்த ஆண்டில் முதல் 70 நாட்களில் வடக்கு, கிழக்கிலேயே அதிகளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 1 தொடக்கம், மார்ச் 11 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனங்கள் உள்ளிட்ட 43 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காலப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்ட 52 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு, 21 காடு அழிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், பல்வேறு தரப்பினராலும் 22.5 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக, வட மத்திய மாகாணத்தில், 17 இடங்களில், 21 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
மேலும் வடக்கு, ஊவா, மற்றம் சப்ரகமுவ மாகாணங்களிலும் அதிகளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அதிகளவில் காடுகள் அழிக்கப்படுவதாகவும், சுற்றாடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற மோசமானதொரு அரசாங்கம் இதற்கு முன்னர் பதவியில் இருக்கவில்லை என்றும், ஓமல்பே சோபித தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.
எனினும், அரசாங்கம் காடுகளை அழிப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பரப்புவதாக குற்றம்சாட்டியிருந்த சிறிலங்கா ஜனாதிபதி, அவ்வாறான ஊடகங்களுக்கு பாடம் கற்பிக்கவும் தவறமாட்டேன் என்றும் எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.