வடக்கு மாகாணத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட மேலும் 5 பேரில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
86 வயதுடைய பெண் தொற்றாளர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.