தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
விவாதத்தின் உரையாற்றிய பழமைவாதக் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, இலங்கையர்களுக்கா தாங்கள் நாட்டை நடத்தவில்லை என்ற போதிலும், வரலாற்று ரீதியான மீறல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அது நியாயமான வழியில் இருக்க வேண்டும் என்பதுடன், மீறல்கள் தொடரக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய ஆசிய – பசுபிக் பிராந்தியத்துக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், இலங்கையில் சிறியளவிலான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அது தாம் எதிர்பார்த்ததை விடவும் அல்லது விரும்பியதை விடவும் மிகவும் மெதுவானது என்று விளக்கமளித்துள்ளார்.
கொடூரமான மோதல்களுக்குப் பின்னர், நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, தனது கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மேலும் வேகமாக செயற்படுவதற்கு நெருங்கிய பங்காளியாக, ஒரு நேர்மையான நண்பனாக, தாங்கள் தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.