இலங்கைவின் நிலைமைகள் திடீரெனச் சீரழிந்துள்ளமையானது, அமைதியின்மைக்கும், உறுதியற்ற நிலைக்கும் வழிவகுக்கும் என்பதனால், நாடாளுமன்றத்தை உடனடியாக மீளக் கூட்டுமாறு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
நேற்று ஏனைய அனைத்துலக நாடுகளின் தூதுவர்களுடன், இலங்கை அதிபரைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர், இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு தீர்வு விரைவாகக் காணப்பட வேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பை இலங்கை அதிபரிடம், ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நாடு தற்போத எதிர்நோக்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு இலங்கை அதிபர் இடமளிப்பது முக்கியம் எனவும், அப்போது தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது கடமைகளை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பதற்றமான, நிச்சயமற்ற தற்போதைய சூழ்நிலையில், வன்முறை மற்றும் ஆத்திரமூட்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் செயற்படுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மக்களின், முழுமையான நன்மைக்காக நல்லிணக்கம் மற்றும் சனநாயகம் ஆகியவற்றிற்கு சாதகமான பாதையை இலங்கை முன்னெடுப்பதை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.