ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவவதற்கு காத்திருப்பதாக பாதுகாப்புபடை தகவல் வெளியிட்டுள்ளது.
குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாசவேலைகளில் ஈடுபட பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சிக்க கூடும் எனவும் பாதுகாப்புபடை எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்து 100 முறை அத்துமீறிய தாக்குதலை நடத்தி உள்ளது. தற்போது, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.
இதை பயன்படுத்தி நாசவேலைகளில் ஈடுபடுத்துவற்கு சுமார் 300இல் இருந்து 415 பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.
இதற்காக காஷ்மீரின் பிர் பஞ்சால் பள்ளத்தாக்கில் 175 முதல் 210 பயங்கரவாதிகளும், ஜம்முவில் உள்ள தெற்கு பிர் பஞ்சால் பகுதியில் 119 முதல் 216 பயங்கரவாதிகளும் பதுங்கி உள்ளனர் என்றும் பாதுகாப்புபடை குறிப்பிட்டுள்ளது.