யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலக்கத்தின் உத்தியோகபூர்வ கீச்சகப் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவித்தூபி இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.
இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறுபல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின்போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது என்றுள்ளது.