சிறிலங்கா கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த, கொழும்பு கடற்படைப் பயிற்சி – 2021 நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளது.
கொழும்பு கடற்படைப் பயிற்சி கடந்த 7ஆம் நாள், கொழும்பு கடற்பகுதியில் தொடங்கி, 10ஆம் நாள் நிறைவடைந்துள்ளது.
இறுதியாக நடந்த கூட்டு ஒத்திகை நிகழ்வுகளை, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன பார்வையிட்டுள்ளார்.
இந்தக் கடற்படைப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையினருடன் விமானப்படையினரும் பங்கேற்றுள்ளனர்.
கடற்படையின், சயுர, சயுரால, சிந்துரால,சமுத்ர ஆகிய 4 ஆழ்கடல் ரோந்துப் படகுகளும், சுரனிமல மற்றும் நந்திமித்ர ஆகிய 2 அதிவேக ஏவுகணைப் படகுகளும், மஹிகாத மற்றும ரத்னதீப ஆகிய கரையோர ரோந்துப் படகுகளும், உதர என்ற அதிவேக பீரங்கிப் படகும், 8 அதிவேக தாக்குதல் படகுகளும் இந்த போர்ப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.
அத்துடன் கடலோரக் காவல் படையின் சுரக்ஷ, சமுத்ர ரக்ஷ, சமரக்ஷ ஆகிய 3 கப்பல்களும், விமானப்படையின், எம்.ஐ -17, பெல் 212 மற்றும் பெல் 412 ரக உலங்குவானூர்திகளும், பீச் கிங் கண்காணிப்பு வானூர்தியும், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கெடுத்திருந்தன.