2018 ம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களில் 239 மன்றங்களில் வெற்றிப்பெற்று சிறீலங்கா பொது ஜன முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி 42 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளதுடன், இலங்கை தமிழரசு கட்சி 38 மன்றங்களை கைப்பற்றியுள்ள நிலையில், சிறீலங்கா சுதந்திர கட்சி உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7 மன்றங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.
340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8ஆயிரத்து 325 பேரை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற தேர்தலில், மொத்தமாக 49 இலட்சத்து 66 ஆயிரத்து 203 வாக்குகளுடன் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ள சிறீலங்கா பொதுஜன முன்னணி, மொதத வாக்குகளில் 45.31 சதவீதத்தினை தனதாக்கிக் கொண்டுள்ளதுடன், இலங்கையின் 25 மாவட்டங்களில் 19 மாவட்டத்தில் பெரும்பான்மையை பெற்றுள்ளது.
நாட்டி்ன ஒட்டுமொத்த 8,325 உறுப்பினர்களில், 2,949 உறுப்பினர்கள் சிறீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செல்லுபடியான மொத்த வாக்குகளில் 32.23 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி, 36 இலட்சத்து 21ஆயிரத்து 338 வாக்குகளைப்பெற்று இரண்டாமிடத்தை பிடித்துள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 2,041 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சி 38 மன்றங்களில் பெரும்பான்மை நிலையில், அக்கட்சி சார்பாக 523 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 உள்ளூராட்சி மன்றங்களிலும் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல், ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும், தென்பகுதியில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கணிசமான வெற்றி மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவு ஆகிய இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது என்று அனைத்துலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி பாரம்பரியமாகவே பலமாகத்திகழும் தலைநகர் கொழும்பு போன்ற இடங்களைத் தவிர ஏனைய
இடங்களில் ராஜபக்சவே பெருவெற்றியை பெற்றுள்ளார் என்பதுடன், தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் சொந்த ஊரான பொலன்நறுவையிலும் சில இடங்களில் மகிந்த அணி ஊடுருவி உள்ளதனையும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
தெற்கில் மகிந்த கணிசமான வெற்றியை குவித்துள்ள அதேவேளை, வடக்கு கிழக்கில் இன்னுமொரு விடயம் அமைதியாக நடந்திருப்பதாகவும், அங்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான உறுப்பினர்களை பெற்றிருந்தாலும், இந்த தேர்தல் அதற்கு ஒரு பின்னடைவாக பலராலும் பார்க்கப்படுவதாகவும் அவை குறிப்பிட்டுள்ளன.
மக்களின் கருத்தை பொருட்படுத்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் போக்குக்கு கிடைத்த பெரிய அடிதான் இந்த முடிவுகள் என்றும், அந்தக் கட்சியின் அடித்தளத்துக்கே பலமான அடி விழுந்துள்ளதாகவும் அவை வர்ணித்துள்ளன.