யேமனில் குடிவரவு தடுப்பு முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் பெருமளவான வெளிநாட்டுக் குடியேறிகள் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
யேமனின் தலைநகரான சானாவில் (Sanaa) ஹௌத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் எதியோப்பிய அகதிகள் தங்கியிருந்த இந்த முகாமில், ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்வது வழக்கம் என்றும், இதனால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்தே பலர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர் என்றும், யேமன் அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
500 அகதிகள் வரை கொல்லப்பட்டு அல்லது காயமடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 50 அகதிகள் வரை உயிரிழந்துள்ளனர் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
170 வரையான அகதிகள் எரி காயங்களுடன் சிகிச்சை பெறுவதாகவும் அவர்களில் 90 பேரின் நிலை ஆபத்தாக உள்ளது என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அதிகாரபூர்வமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று யேமன் அரசும், மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.





