தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு அமைச்சர் சுவாமிநாதன் தகுதியற்றவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த அமைச்சர் சுவாமிநாதன், தமிழ்ப் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைப்பதால் என்ன தவறு என கேள்வியெழுப்பி இருந்தமை குறி்ப்பிடத்தக்கது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன், பௌத்தர்கள் இல்லாத வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புத்த சிலையை நிறுவுவதோ அல்லது பௌத்த விகாரைகளை அமைப்பதோ தமிழர் தாயகப் பகுதிகளைப் பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்குள் கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடு என்பதனைச் சுட்டிக்காட்டியு்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியிலிருந்து புத்த விகாரைகளையும், சிலைகளையும் அரசாங்கம் கிழக்கு மாகாணத்திலும், வடக்கு மாகாணத்திலும் நிறுவி, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதனையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
இதன் காரணமாகத் தமிழ் மக்களுடைய விகிதாசாரப் பரம்பல் மாற்றப்பட்டிருப்பதனையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய அரசாங்கமும் தமிழ்மக்களுடைய விகிதாசாரத்தை மாற்றும் வகையில் இராணுவத்தின் மூலமாக புத்த சிலைகளை நிறுவி வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொரு விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு முழுவதும் தற்போது இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்ற சூழலில், சிங்கள மக்களே வாழாத தமிழர் பகுதிகளில் இராணுவம் பெளத்த விகாரைகளையும், புத்த சிலைகளையும் நிறுவுவது தவறானதொரு விடயமென அமைச்சர் ராஜித சேனாரத்னவே கூறியிருந்ததையும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.