45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் மிக கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் இரண்டாம் திகதிவரை இந்த போட்டி நடைபெறவுள்ளது.
இந்த ஆரம்ப விழாவில் இந்தோனேஷிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், இதில் ஆயிரம் கலைஞர்கள் வரையில் பங்கேற்றனர்.
வடகொரியாவும், தென்கொரியாவும், குளிர்கால ஒலிம்பிக்கை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து சென்றன
ஆசிய மெய்வல்லுனர் வீர, வீராங்கணைகளுக்கு இடையில் நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா மற்றும் இலங்கை உள்பட 45 நாடுகள் பங்கேற்கின்றன.
இதற்கமைய இன்று ஆரம்பமான இந்த போட்டிகளில் சுமார் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தமது திறமைகளை வெளிபடுத்தவுள்ளனர்.
குறிப்பாக இந்த போட்டியில் கபடி, ஸ்குவாஷ், சீட்டாட்டம் உள்ளிட்ட ஒலிம்பிக்கில் இல்லாத எட்டு வகையான விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.
அதேபோல், தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஒக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
1982 ஆம் ஆண்டில் இருந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து வரும் சீனா இந்த முறையும் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் 879 வீரர், வீராங்கனைகளை களம் இறக்கியுள்ளது.
எனினும் ஜப்பான், தென்கொரியா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பதக்கங்களை வேட்டையாடும் எதிர்பார்பில் உள்ளன.