பிராம்டன் நகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை கட்டியெழுப்புவதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக கனடியத் தமிழர் தேசிய அவை நகரபிதா பற்றிக் பிறவுன் (Patrick Brown), கவுன்சிலர் மார்ட்டின் மெடிரோஸ் (Martin Medros) மற்றும், பிராம்ப்டன் நகர சபைக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி என்ற பிரேரணையை “தமிழ் இனவழிப்பு நினைவுத் தூபி” என்ற பிரேரணையாக வலுப்படுத்த பிராம்ப்டன் நகர சபையிடம் கனடியத் தமிழர் தேசிய அவை கோரியுள்ளது.
இந்த முயற்சியில், கனடியத் தமிழர் தேசிய அவை நகரபிதா பற்றிக் பிறவுன், பிராம்ப்டன் நகர சபை, பிராம்ப்டன் தமிழ்ச் சங்கம், பிராம்ப்டன் தமிழ் முதியோர் சங்கம், கனேடிய தமிழ் இளைஞர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பிராம்ப்டன் நகர சபையில், ஜனவரி மாதம் தமிழ் மரபுரிமை மாதமாகவும், ஒவ்வொரு மே 18 ஐயும் தமிழ் இனவழிப்பு நினைவு நாளாகவும் பிரகடனப்படுத்தும் தீர்மானங்கள் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.