அனைத்துச் சமூகத்தினருக்கும் உரித்தான சம பிரஜாவுரிமைக்கான உரிமையானது, ஆட்சி அதிகாரப் பகிர்வை நோக்கி முடுக்கி விடப்பட்ட ஒரு நியாயமான முறைமையினால் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான வல்லுனர் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், மீண்டும் நிகழாமையை உண்மையான நல்லிணக்கத்தை அடைவதன் மூலமே உறுதிசெய்ய முடியுமென்பதோடு, பரஸ்பரம் இணங்கிக் கொள்ளப்படும் ஒரு சமூக ஒப்பந்தத்தை, அரசியலமைப்பை நாம் ஏற்படுத்தினால் மாத்திரமே அது நிகழமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கையொப்பமிட்டுள்ளதுடன் இதன் பிரதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டொனியோ குட்டரெஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும் இந்தப் பிரதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிந்துரையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன், இலங்கைத் தமிழசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.