யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட 9 உள்ளூராட்சி உறுப்பினர்களை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவு மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவின்போது, கட்சியின் கொள்கைகளை மற்றும் கட்சியின் தீர்மானத்தை மீறி, துரோகம் இழைத்த, மன்னிக்க முடியாத குற்றங்களை புரிந்த, குறித்த ஒன்பது பேரையும் விசாரணைகள் இன்றி, மத்திய குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களான பார்த்திபன், தனுஜன், ஜனன், பத்மமுரளி, சுபாஜினி, ஜெயசீலன் ஆகியோரும், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், உறுப்பினர்களான அகிலாண்டரூபி, கௌசல்யா ஆகியோருமே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, விசாரணைகள் இன்றி கட்சியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த 9 உறுப்பினர்களும் நீதிமன்றில் தனித்தனியாக வழக்கு தொடர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.