யாழ்ப்பாண கோட்டைக்குள் சிறிலங்கா இராணுவம் புதிதாக வர வேண்டிய எந்த தேவையும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாண கோட்டைக்குள் மாத்திரமன்றி, வடக்கில் எந்த இடத்திலும் தற்போது புதிதாக இராணுவத்தினரை நிலை நிறுத்த வேண்டிய தேவையில்லை என்பதையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாண கோட்டை தொல்லியல் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்பதனால், அங்கு இராணுவத்தினரை நிலை நிறுத்தும் எந்த தேவையும் இல்லை எனவும், யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை பிரதமர், நாட்டில் மீண்டும் போர் ஒன்று ஏற்படாது என்று கூறியுள்ள நிலையில், புதிதாக இராணுவ முகாம்களை ஏற்படுத்தும் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இல்ஙகை பிரதமர் உட்பட அரசாங்கம் மீண்டும் போர் ஏற்படாது என்ற நம்பிக்கையில் இருக்கும் போது, வடக்கில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்தி விட்டு, பொது பாதுகாப்புக்காக காவல்துறையினர் ஈடுபடுத்த வேண்டிய நிலையில், யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவ முகாமை வைத்திருப்பது தேவையாற்ற நடவடிக்கை எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.