முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இனங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படல் வேண்டும் – விக்னேஸ்வரன்

1386

இலங்கையில் இனங்களுக்கு இடையில் பாகுபாடு காட்டாது சகலரும் சமமாக மதிக்கப்படுவார்கள் என்ற நிலைமையை பெரும்பான்மையினர் உறுதிப்படுத்தினால் மாத்திரமே, அரசியலமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்ட சுவிட்ஸர்லாந்து நாட்டு நீதியமைச்சர் சைமனேட்டா சொமாருகா வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில், குறித்த அந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் ஆட்சியில் சகலரும் சமமாக நடத்தப்பட்ட போதிலும், 1948ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டதுடன், 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் இன ரீதியான பாகுபாடு ஆரம்பமானதுடன், இதுவரை ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் பாகுபாடுகளையே காட்டி வந்தன என்பதனை சுவிஸ் அதிகாரிளுக்கு விபரித்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து வந்த கல்வி தரப்படுத்தல்களால் தமிழ் மாணவர்கள் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாது போனதனையும் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான பாகுபாடுகள் இன்னமும் தொடர்கின்ற நிலையில், இவ்வாறான பின்னணியில் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்ற சந்தேகத்தினையும் அவர் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சித்திரவதைகள் தொடர்வதுடன், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும், அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் முதலமைச்சர் சுடடிக்காட்டியுள்ளார்.

நாட்டில் 17 பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் உள்ள நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறான சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதனையும் சுடடிக்காட்டியுள்ளதாகவும், முன்னரைவிட நாட்டில் நிலைமைகள் மாறியுள்ள போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திலிருந்து இளைஞர்கள் விடுவிக்கப்பட்டாலே தீர்வொன்று கிடைக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் அதிகமாகக் காணப்படுவதனையும், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் உள்ளதையும், இவர்கள் தற்பொழுது ஓரளவுக்கு அடக்கி வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பிடித்து வைத்து, அதில் விவசாயங்களை மேற்கொண்டு வருவதனையும் சுவிஸ் அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் நிகழ்வு அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்பதையும், இவ்வாறன குறைகள் குறித்த சந்தேகங்களைக் கேட்பதற்காகவே கடந்த வாரம் குறித்த அந்த பேரணியை நடத்தியிருந்ததையும் அவர்களுக்கு விபரித்துள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *