தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்த கருத்தொன்றுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு, மீளப்பெறப்பட்டதை அடுத்து, செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
தாம் பல இராணுவத்தினரை கொலை செய்திருப்பதாக கடந்த பொதுத்தேர்தல் பிரசாரகாலத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, கடுவலை நகரசபை உறுப்பினர் ஒருவர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தெஹிதெனிய, மூர்து பெர்ணான்டோ மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, விநாயகமூர்த்தி முரளிதரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக ஏலவே விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், இந்த மனுமீதான விசாரணை அவசியமற்றது என்று, மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த மனுவை மீளப்பெற்றுக் கொள்ள நீதியரசர்கள் ஆயம் அனுமதி வழங்கியது.