தொடர் மழையினால், திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினாலும், இரணைமடுக் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாலும், தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கனகாம்பிகைகுளம் பிரமந்தனாறு குளம் போன்றன வான்பாய்ந்து வருவதால், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, கனகாம்பிகைக்குளம், பன்னங்கண்டி, பரந்தன் பகுதிகளிலுள்ள மக்களையும், பிரமந்தனாறு- மயில்வாகனபுரம், பகுதி மக்களையும், அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால், மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை நகரில் உள்ள மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி, 3ம் கட்டை, அலஸ்தோட்டம், துவரங்காடு,கன்னியா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
திருகோணாமலை, நிலாவெளி பிரதான வீதியிலும் வெள்ள நீர் சடுதியாக அதிகரித்துள்ளதால், போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.